×

வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை உலகம் முழுவதும் கண்காணிக்க செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்

சென்னை: வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை உலகம் முழுவதும் கண்காணிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சி.என்.இ.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தோ- பிரெஞ்சு அகச்சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற திரிஷ்ணா திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

நிலப்பரப்பு நீர் அழுத்தம் மற்றும் நீர் பயன்பாட்டை அளவிடுவதற்கு விரிவாக கண்காணிப்பதும், கடலோர மற்றும் உள்நாட்டு நீர் தரம் மற்றும் இயக்கவியல் ஆகியவற்றை கண்காணிப்புதும் இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம். கூடுதலாக, நகர்ப்புற வெப்பத் தீவுகள், எரிமலை செயல்பாடு மற்றும் புவிவெப்ப வளங்களுடன் தொடர்புடைய வெப்ப முரண்பாடுகளைக் கண்டறிதல் மற்றும் பனி உருகும் ஓட்டம் மற்றும் பனிப்பாறை இயக்கவியல் ஆகியவற்றின் துல்லியமான கண்காணிப்பு ஆகியவற்றின் விரிவான மதிப்பீட்டிற்கும் இந்த செயற்கைக்கோள் உதவும்.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:இந்த செயற்கைக்கோள் 2 முதன்மை கருவிகளை சுமந்து செல்லும். தெர்மல் இன்பிரா-ரெட் கருவியை பிரான்ஸ் விண்வெளி நிறுவனம் வழங்க உள்ளது. இது 4 சேனல் நீண்ட அலைநீள அகச்சிவப்பு இமேஜிங் சென்சார் ஆகும். இதன் மூலம் உயர்-தெளிவு மேற்பரப்பு வெப்பநிலையை அறிய முடியும். இதுதவிர வெவ்வேறு பகுதிகளில் நிலத்தில் இருந்து வெளிப்படும் வெப்பத்தின் அளவையும் இது வரைபடமாக்கும்.

காணக்கூடிய அகச்சிவப்பு- குறுகிய அலை அகச்சிவப்பு என்ற ஆய்வு கருவி இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு வருகிறது. பூமியின் மேற்பரப்பின் பிரதிபலிப்பு அல்லது ஆல்பிடோவை 7 பட்டைகளில் வரைபடமாக்கும். இது பூமியின் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் வெப்பத்தின் அளவை அளவிடுகிறது. பல்வேறு உயிர் இயற்பியல் மற்றும் கதிர்வீச்சுகளை கணக்கிடும். இந்த பணியில் எதிர்பார்க்கப்படும் பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சுற்றுப்பாதையில் தொலைவில் இருந்து பூமியை கண்காணிக்கிறது. அதீத வெப்பநிலை மற்றும் வானிலை நிகழ்வுகள் பூகோளத்தை பிடித்துக் கொள்வதால் செயற்கைக்கோள் மற்றும் அது வழங்கும் தரவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நீர்நிலை, விவசாயத் தொழில்கள் மற்றும் இந்தியாவில் உள்ள விவசாய சமூகம் மத்தியில், நீரில் புதிய நிலையான கொள்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய தரவுகளை வழங்குவதன் மூலம் முக்கியமான நீர் மற்றும் உணவு பாதுகாப்பு பிரச்னைகளை இந்த பணி தீர்க்கும்.

காலநிலை மாற்றம் தணிப்பு முயற்சிகள், காலநிலை மாற்றத்தின் மானுடவியல் அல்லது மனிதனால் தூண்டப்பட்ட தாக்கங்களை மையமாகக் கொண்டு, முக்கியமான நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு சவால்களை கண்டறிவது இந்த திரிஷ்ணா செயற்கைக்கோளின் முக்கிய பணி ஆகும். நகர்ப்புற திட்டமிடுபவர்கள் விரிவான நகர்ப்புற வெப்ப தீவு வரைபடங்கள் மற்றும் வெப்ப எச்சரிக்கைகள் மூலம் பயனடைவார்கள். கடலோர மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் மாசுபாட்டை கண்டறிய நீரின் தரக் கண்காணிப்பு உதவும். கடலோர விளிம்புகளில் கடலுக்கு அடியில் நிலத்தடி நீர் வெளியேற்றத்தை அடையாளம் காணவும் இது உதவும்

The post வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை உலகம் முழுவதும் கண்காணிக்க செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...