×

பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழா தொடக்கம் திரளான பக்தர்கள் தரிசனம் அணைக்கட்டு அருகே வேலங்காடு ஏரியில்

அணைக்கட்டு, மே 8: அணைக்கட்டு அருகே வேலங்காடு ஏரியில் பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரி திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது. ஊர் கோயில், ஏரிக்கோயில் என இரண்டு கோயிலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், துறை அதிகாரிகளுடன் இணைந்து வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு உள்ளிட்ட 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் ஏரி திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இந்தாண்டு புஷ்பரத ஏரி திருவிழா, சித்திரை கடைசி புதன்கிழமையான வரும் 10ம் தேதி நடக்கிறது. இதற்காக ஏரி சுத்தம் செய்யும் பணி, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முன்னதாக கடந்த மாதம் 24ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து புஷ்பரத ஏரி திருவிழாவை முன்னிட்டு ஏரியில் உள்ள பொற்கொடியம்மன் ஏரி கோயிலில் பச்சை போடுதல் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இதற்காக வல்லாண்டராமம் ஊர் கோயிலில் இருந்து உற்சவர் பொற்கொடியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வேலங்காடு ஏரியில் உள்ள கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவில் ஏரியில் உள்ள கோயிலில் பச்சை போடுதல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஏரியில் உள்ள பொற்கொடியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், கோயில் செயல் அலுவலர் அண்ணாமலை, எழுத்தர் ஆறுமுகம், ஊராட்சி தலைவர் சைனலதாமணி, ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம் மற்றும் 4 கிராம மேட்டுக்குடிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழா தொடக்கம் திரளான பக்தர்கள் தரிசனம் அணைக்கட்டு அருகே வேலங்காடு ஏரியில் appeared first on Dinakaran.

Tags : Pochodiumman Pushbarata Lake Festival ,Velangadu Lake ,Vaishana ,Pochodiumman Pushbarata Lake ,Polkodiumman Pushbarata Lake Festival ,
× RELATED புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு...