×

டெல்லி விசிட்டுக்கும் அழைப்பு இல்லையாம் அதிமுகவில் முக்குலத்தோரை தொடர்ந்து புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி: கடும் அதிருப்தியில் முக்கிய தலைவர்கள்

சென்னை: அதிமுகவில் முக்குலத்தோரை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அந்த சமூகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி விசிட்டிலும் அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர்களை அழைத்து செல்லாமல் புறக்கணித்திருப்பது அவர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே எழுந்த மோதல் போக்கை தொடர்ந்து, தற்போது நீதிமன்ற உத்தரவுபடி எடப்பாடி பழனிசாமியின் கைக்கு அதிமுக சென்று விட்டது. அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியில் முக்குலத்தோரை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. முக்குலத்தோர், அதிமுக இடையிலான உறவு, அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே நீடித்து வருகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்து கொடுத்த மாயத்தேவர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், சசிகலாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக முக்குலத்தோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

முக்குலத்தோர் அதிகம் இல்லாத சென்னை, கோவை மாவட்டங்களில் கூட அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், ஜெயலலிதா அமைச்சரவையில் எப்போது 6, 7க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முக்குலத்தோரை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த சமூகத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் 3 முறை முதல்வராக அமர வைக்கப்பட்டார். மேலும் ஏராளமான எம்எல்ஏக்களும் இருந்தனர். அந்த அளவுக்கு முக்குலத்தோருக்கு, ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி கைக்கு அதிமுக சென்றதில் இருந்து, அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி பறித்து அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அந்த சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இந்த பிரச்னையானது தற்போது அதிமுகவில் பூதாகரமாகி வருவதை சமாளிக்கும் வகையில் மதுரையில் மாநாடு நடத்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனாலும், கடும் அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோரை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை தவிர்க்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதும், அதிமுவின் முக்கிய நிகழ்வுகளில் அவர்கள் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதும் அந்த சமூகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் டெல்லி சென்று பாஜ தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கூட, கவுண்டர் மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் ெகாடுத்து எடப்பாடி பழனிசாமி அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று அவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.அதாவது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மேலும் மூத்த அமைச்சர் என்பதால் மீனவர் சமூகத்தை சேர்ந்த ஜெயக்குமாரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில், முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்காக இருப்பவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அவருக்கும் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. மேலும் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றவர்களையும் அழைத்து செல்லவில்லை.

இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தொடர்ந்து முக்குலத்தோர் புறக்கணிக்கப்படுவதாக அந்த சமூகத்தினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற புகார்கள், அவர் ஒற்றை தலைமை விவகாரத்தை கையில் எடுத்த போதே எழுந்தது. அப்போது, முக்குலத்தோர் சமூகத்தினரை ஆறுதல்படுத்தும் வகையில் எதிர்கட்சி துணை தலைவர் பதவியை, அந்த சமூகத்தில் செல்வாக்காக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு வழங்காமல் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு வழங்கினார். இதன் மூலம் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அந்த சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை படிப்படியாக குறைத்து வருவதும், அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்குவதும் அந்த சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர்.

The post டெல்லி விசிட்டுக்கும் அழைப்பு இல்லையாம் அதிமுகவில் முக்குலத்தோரை தொடர்ந்து புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி: கடும் அதிருப்தியில் முக்கிய தலைவர்கள் appeared first on Dinakaran.

Tags : Delhi Visit ,Edapadi Palanisamy ,Urimukhava ,Chennai ,Palanisamy ,Adhimukwel ,Edappadi Palanisamy ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’