சண்டிகர்: பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டை அடுத்து பதிண்டா முகாம் உள்ள பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ராணுவம் சோதனை நடத்தி வருகிறது. ராணுவ முகாமுக்குள் அதிகாலை 4.35 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவர்கள் யார், சூப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது யார், எத்தனை பேர் ஈடுபட்டனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஏதேனும் பயங்கரவாத செயலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணையை ராணுவம் தொடங்கியுள்ளது. இதனிடையே, பதிண்டா ராணுவ முகாமில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பயங்கரவாததாக்குதல் இல்லை என பஞ்சாப் போலீஸ் கூறியுள்ளது. பதிண்டா ராணுவ முகாமில் 2 நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்களுடன் துப்பாக்கி காணாமல் போன நிலையில் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் ராணுவ முகாமில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் ராணுவ வீரருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக போலீஸ் கூறியுள்ளது. பதிண்டா ராணுவ கண்டோன்மெண்ட் வாயிற் கதவுகள் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
The post பதிண்டா ராணுவ முகாமில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தீவிரவாத தாக்குதல் இல்லை: பஞ்சாப் போலீஸ் தகவல் appeared first on Dinakaran.