கர்நாடகா: கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ள நிலையில் சீட் மறுக்கப்பட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சர்ச்சையில் சிக்கியவர்கள் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் உள்ளிட்டோருக்கு பாஜக வாய்ப்பு வழங்க மறுத்துள்ளது. அந்த வகையில் மீன்வளத்துறை அமைச்சர் அங்காரா மற்றும் 10 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.
மேலும் பல தொகுதிகளில் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கூறி கட்சி தலைமைக்கு எதிராக பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டரின் ஆதரவாளர்களும் பாஜக தலைமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈஸ்வரப்பா ஆதரவாளர்கள் சாலையில் டயர்களை தீ வைத்து கொளுத்தியதால் போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். பெலகாவில் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அணில் பேனேகே, ராம் துப் எம்.எல்.ஏ மகாதேவபா ஆகியோரின் வீடுகளுக்கு முன்பு கூடிய பாஜக தொண்டர்கள் அவர்களுக்கு சீட்டு மறுக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல பெங்களூரு ஜெயநகர் தொகுதிக்கு என்.ஆர். ரமேஷை வேட்பாளராக அனுமதிக்காததால் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post மூத்த தலைவர்கள், அமைச்சர், 10 எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் இல்லை: கர்நாடகாவில் பாஜக தலைமைக்கு எதிராக தொண்டர்கள் போராட்டம் appeared first on Dinakaran.