கீழக்கரை, மார்ச் 19: பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என கீழக்கரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பிறப்பு, இறப்பு தொடர்பாக மருத்துவமனை பதிவேடுகளின்படி உள்ளாட்சி அமைப்புகளில் கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் பதிவேற்றம் மூலம் இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தனியார் இணையதள மையம், இணையதள செயலி பதிவேற்றம் மூலம் எளிதாக பெறலாம். ஆனால் கிராமப் புறங்களில் பிறப்பு, இறப்பு சான்று பெற பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது.
கீழக்கரை தாலுகாவில் தில்லையேந்தல், காஞ்சிரங்குடி, மாயாகுளம், ஏர்வாடி ஊராட்சி கிராம மக்கள் பிறப்பு, இறப்பு தொடர்பாக விபரம் பதிவு செய்ய ஓராண்டு நிறைவடையாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை அணுகி, உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் வட்டாட்சியர் ஒப்புதல் பெற்று பதிவு செய்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவார். ஓராண்டு கடந்தால் சான்றிதழ் பெற கோட்டாட்சியர் பரிந்துரைப்படி தாசில்தார் சான்றிதழ் அளிக்கும் நடைமுறை உள்ளது. கீழக்கரை பகுதியில் 1,990 ஆண்டுக்கு பின் பிறந்தோர், இறந்தோரின் சான்றிதழ் பெற தாலுகா அலுவலகம் சென்றால் கீழக்கரை சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்துகின்றனர் அங்கு சென்றால் அலைக்கழிக்கின்றனர் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கீழக்கரை 500 பிளாட் பகுதியில் பிறப்பு மற்றும் இறப்பு ஒரு வருடத்திற்குள் பதிவு செய்யவோ, சான்றிதழ் பெறவோ கீழக்கரை குரூப் (37) கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்ய முடியாது எனவும் அருகிலுள்ள மோர்குளம் குரூப்பில் தான் பதிந்து சான்றிதழ் பெற வேண்டும் என்கின்றனர். இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற அதிக அலைச்சல் ஏற்படுவதுடன், தாமதமும் ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த காதர் கூறுகையில், ‘நகராட்சி மற்றும் மாநகராட்சி போல கிராம மக்களும் அலையாமல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே இடத்தில் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். கீழக்கரை தாலுகா பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘2013 முதல் 2019 வரையிலான பிறப்பு, இறப்பு தொடர்பாக இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் படிப்படியாக எல்லா வருடங்களையும் அரசாணை பெற்று பதிவேற்றம் செய்து விடுவோ ம். அதன் பின்னர் மக்கள் எளிதாக இந்த சான்றிதழ்களை பெறலாம்’ என்றார்.