சேலம்: சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அம்மன் கோயிலில் சூலமும், கோபுர கலசமும் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் அம்மாபேட்டையில் குஞ்சு காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்து பூசாரி கதவை பூட்டிச்சென்றார். நேற்று காலை கோயிலுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் இருந்த சூலம் மற்றும் கோபுர கலசம் ஆகியவை திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பூசாரி தகவல் கொடுத்தார். இதையடுத்து அம்மாபேட்டை சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் விமலா, அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.