கோவை, பிப்.27: கோவையில் நாடார் சங்கம் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. கோவை நாடார் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. இடையில், நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை. தற்போது வழக்கு முடிவு பெற்று மீண்டும் தேர்தல் நடக்கிறது. அதன்படி, கோவை நாடார் சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. இந்த தேர்தல் டாடாபாத்தில் உள்ள நாடார் சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்தது. மொத்தம் 10 ஆயிரத்து 609 வாக்குகள் பதிவாகியுள்ளன. இரவு வாக்குகள் எண்ணப்பட்டன.
இதையடுத்து, இன்று தலைவர், பொதுச்செயலாளர் பொருளாளர், 3 துணை தலைவர்கள், 3 துணை செயலாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இத்தேர்தலில், 2 அணிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர். டி.ஆர்.சி அணியினர், 1 முதல் 51 வரையுள்ள எண்களுக்கு வாக்கு அளிக்கக்கோரி பிரசாரம் செய்தனர். இந்த அணி தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன். நாடார் சங்கம் தேர்தல் முன்னிட்டு இரு தரப்பினருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சங்கத்தின் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் பலர் குவிந்து வாக்களித்தனர்.
