கும்பகோணம்: கும்பகோணம் சக்ரபாணிசுவாமி கோயிலில் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் எழுந்தருளிய சக்கரபாணி சுவாமிக்கும், கொடிமரத்திற்கும் நாதஸ்வர மேள தாளம் முழங்க, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ ஸ்தலங்களுடன் இணைந்து ஒருசேர பத்து நாள் விழாவாக நடைபெறும் மாசிமக பிரமோற்சவம் மிகவும் விசேஷமானது, இவ்வாண்டிற்கான மாசிமக பிரமோற்சவத்தின் துவக்கமாக நேற்று முன்தினம் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர் கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் காளஹஸ்தீஸ்வரர் என 6 சைவ திருத்தலங்களில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து, வைணவ ஸ்தலமான சக்ரபாணி சுவாமி திருக்கோயிலில் உற்சவர் சக்ரபாணி சுவாமி, விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற திருக்கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றபட்டு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து ராஜகோபால சுவாமி மற்றும் ஆதிவராக பெருமாள் கோயில் என மொத்தம் மூன்று கோயில்களில் நேற்று கொடியேற்றம் விழா நடைபெற்றது. மாசிமக பிரமோற்சவத்தில் வரும் மார்ச் 1ம் தேதி இரவு ஓலைச்சப்பரமும், முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 6ம் தேதி திங்கட்கிழமை காலை சக்ரபாணிசுவாமி திருத்தேரோட்டமும், நண்பகல் 12 மணிக்கு சைவத்திருத்தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மகாமககுளத்தின் நான்கு கரைகளிலும் ஒருசேர எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது.