உளுந்தூர்பேட்டை, பிப். 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை மேலப்பாளையம் கிராமத்தில் பழமையான அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 18ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றி சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மயானக்கொள்ளை உற்சவம், அம்மன் வீதியுலா நடைபெற்று வந்த நிலையில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரோட்டம் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர்முட்டியை அடைந்தது. இந்த தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்று வழிபட்டனர். முக்கிய இடங்களில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அங்காளபரமேஸ்வரி அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர், அம்மன் அடியார்கள் செய்து இருந்தனர்.






