விழுப்புரம், பிப். 24: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின்பேரில், முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. நேற்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வராதது குறித்து தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து அரசுத்தரப்பு சாட்சிகள் ஆஜராகாத நிலையில் வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.