×

குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கு சிபிசிஐடி விசாரணை துவங்கியது

விழுப்புரம், பிப். 21: குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கு தொடர்பான ஆவணங்களை எஸ்பி நாதா முன்னிலையில், போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். ஆசிரம ரகசியம் கசியாமல் இருந்தது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபின்பேபி. இவர் கோவை, விழுப்புரம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரமத்தை நடத்தி வந்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் ஆசிரமத்தை துவக்கி உள்ளார். இங்கு கடந்த 2021ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த ஜபருல்லா மாயமானது குறித்து அவரது உறவினர் கெடார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் கண்டுபிடிக்காத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி கடந்த பிப்ரவரி 10ம் தேதி செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். இங்கு 145 பேர் தங்க வைக்கப்பட்டிருந்ததும், ஆசிரமம் அனுமதியின்றி செயல்பட்டதும் தெரியவந்தது. மேலும் ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்ட சிலருக்கு பாலியல் தொந்தரவு, சித்தரவதை மற்றும் பலர் காணாமல் போனதாக புகார்கள் அளித்தனர். இது குறித்து தனித்தனி புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த ஆசிரமத்திலிருந்த ஜபருல்லா உள்ளிட்ட 53 பேரை பெங்களூருவில் தனது நண்பர் நடத்தும் ஆட்டோ ராஜா காப்பகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், அதிலிருந்து 11 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே தேசிய மகளிர்ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனாகட்டார், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் குமாரி உள்ளிட்டவர்கள் சம்பவம் நடந்த குண்டலப்புலியூர், காலாப்பட்டு ஆசிரமங்களில் நேரில் விசாரணை நடத்தியதில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை உறுதிசெய்தனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கு கடந்த 18ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று கெடார் காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி, கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர், விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதியிடம் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் எஸ்பி அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலையே அவர்கள் விசாரணையை துவங்கினர். இந்நிலையில் ஆசிரமத்தின் ரகசியங்கள் இத்தனை ஆண்டுகள் வெளியாகாமல் இருந்தது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரம பணியாளர்கள் பிஜூஆனந்த், பூபாலன், முத்துகுமாரி, கோபிநாத், அய்யப்பன், தாஸ், சதீஷ் ஆகிய 7 பேரும் ஆசிரமத்திற்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சிகிச்சைக்குப்பின் குணமடைந்த அவர்களை அங்கேயே பணியாளர்களாக நியமித்து, மாத சம்பளம் கொடுத்து வந்துள்ளார் ஜூபின்பேபி. அவர்களை வீட்டிற்கும் அனுப்பாமல் அங்கேயே அறைஒதுக்கி ஆசிரமத்தின் ரகசியங்களை வெளியே செல்லாமல் இருக்கவும், அங்கு நடக்கும் சம்பவங்களை துணையாகவும், ஆசிரமத்தை பாதுகாக்கவும் அவர்களை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags : CBCID ,
× RELATED குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில்...