விழுப்புரம், செப். 6: விழுப்புரம் எம்ஜிரோட்டில் கடையில் உட்கார்ந்திருந்தவரிடம் சிறுவன் செல்போன் திருடிச்சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விழுப்புரம் எம்.ஜி.ரோட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட அதிகளவிலான கடைகள் செயல்பட்டுவருகின்றன. பொருட்கள் வாங்க கிராமப்பகுதிகளிலிருந்தும் இங்கு வந்துசெல்கின்றனர். கூட்டநெரிசலை பயன்படுத்தி அவ்வப்போது திருட்டுசம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே, கடந்த 31ம்தேதி விநாயகர்சதுர்த்தியன்று பொருட்கள் வாங்குவதற்காக இந்த சாலையில் மக்கள்கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை சாதகமாகபயன்படுத்திக்கொண்ட திருடர்கள் கடைக்கு வந்துசென்ற பொதுமக்கள் 9 பேரிடம் செல்போனை திருடிச்சென்றுள்ளனர். மேலும், அங்குள்ள ஒருகடைமுன்பு அமர்ந்திருந்த சாரதி என்பவரின் சட்டைபாக்கெட்டிலிருந்து சிறுவன் ஒருவன் செல்போனை திருடிச்சென்றுள்ளான். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் முழுவதுமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் சாரதி அளித்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சட்டை பாக்கெட்டிலிருந்து சிறுவன் செல்போனை திருடும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றன.