திண்டிவனம், ஆக. 27: திண்டிவனத்தில் கேரளா ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கார், லேப்டாப், செல்போன் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். திண்டிவனம் பகுதியில் கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஏராளமானோர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தராசன், தமிழ்மணி, ஏஎஸ்பி தனிப்படை போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன், காவலர்கள் ஜனார்த்தனன், கோபால், செந்தில், பூபால் உள்ளிட்ட போலீசார் திண்டிவனம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பூதேரி கோட்டைமேடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த காரில் இருந்தவர்களை விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் காரில் கேரளா ஆன்லைன் மற்றும் நேர்முக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் திண்டிவனம் செந்தமிழ் நகரை சேர்ந்த ரஹ்மத்துல்லா(23), சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பிரவீன்(19) எனவும் இவர்கள் தொடர்ந்து கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 லேப்டாப், 2 செல்போன்கள், சொகுசு கார், லாட்டரி விற்பனை செய்த ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.