பழநி, ஆக. 2: பழநி அருகே ஆயக்குடியில் பாஜக கிழக்கு ஒன்றியத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர்கள் செந்தில்குமார், ராமசாமி தலைமை வகித்தனர். ஒன்றிய பொது செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். கிழக்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பாஜக ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ரவிக்குமார், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ், விவசாய அணி மாவட்ட தலைவர் காளிதாஸ் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஆயக்குடி பேரூராட்சிக்குட்பட்ட குட்டிகரடு பகுதிக்கு குடிநீர் வசதி செய்துதர வேண்டும். ஆயக்குடி பேருராட்சிக்கு கூடுதல் தண்ணீரை சேமிக்கும் வகையில் புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். குட்டிக்கரடு பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ், மின்சார வசதி செய்து தர வேண்டும். ஆயக்குடி கொய்யா மார்க்கெட்டிற்கு மேற்கூரை அமைக்க வேண்டும். பாலசமுத்திரம் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகிரிப்பட்டி 15வது வார்டில் சேதமடைந்துள்ள தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.