பெரம்பூர், ஜூலை 27: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செஸ் போட்டிக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெரம்பூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில் பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பள்ளி மைதானத்தில் 6400 சதுர அடி பரப்பில் பிரமாண்ட சதுரங்க பலகை அமைக்கப்பட்டு அதில் மாணவர்கள் 32 வகையான வடிவங்களில் சதுரங்க விளையாட்டை விளையாடினர்.
14 அடி உயரம் 6 அடி அகலம் கொண்ட தம்பி சின்னம் வடிவிலான பிரமாண்டமான கட்டவுட்டுகள் மைதானம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், தம்பி சின்னம் அச்சடித்த டிஷர்ட்டுகளை பள்ளி மாணவர்கள் அணிந்து சதுரங்கம் தொடர்பான வண்ண ஓவியங்களை தங்களது முகத்தில் அணிந்து இருந்தனர். இந்த சதுரங்க போட்டியினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எவர்வின் பள்ளி மூத்த முதல்வர் புருஷோத்தமன் கூறுகையில், ‘‘செஸ் போட்டி தொடர்பான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பல ஆண்டுகளாகவே செஸ் போட்டி நமது நாட்டில் சிறந்த முறையில் விளையாடப்பட்டு வருகிறது. தற்போது செல்போன் மோகத்தால் மாணவர்கள் அதில் மூழ்கி இருக்கும் வேலையில் செஸ் போட்டி தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. மூளைக்கு அதிக வேலை தரும் இதுபோன்ற விளையாட்டுகளை மாணவர்கள் ஆர்வமுடன் கற்றுக்கொண்டு அதில் சிறந்த முறையில் விளங்க வேண்டும்,’’ என்றார்.