×

கணவரிடம் ஜீவநாம்சம் பெற்றுத்தரக்கோரி இளம்பெண் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

திருப்பூர், மே 21: கணவரிடம் இருந்து ஜீவநாம்சம் பெற்றுத்தரக்கோரி இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த பத்மாவதி (36), தனது குழந்தைகள் 2 பேருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மீட்டு உரிய தீர்வு காண்பதாக நடவடிக்கை எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது பத்மாவதி போலீசாரிடம் கூறியதாவது:- நான் ஆத்துப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன்.

எனது கணவர் பரந்தாமன். எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நாங்கள் இருவரும் ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வருகிறது. இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும், என்னை எனது கணவர் அடித்து, துன்புறுத்தவும் செய்தார். மேலும், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இது தொடர்பாக என்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன்.

இதன் பின்னர் அந்த வழக்கை வாபஸ் பெற்றால் சேர்ந்து வாழலாம் என தெரிவித்தார். தொடர்ந்து நான் வழக்கை வாபஸ் பெற்றதும் என்னிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். எனவே எனது கணவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனது குழந்தைகளின் நலன் கருதி எனக்கு ஜீவநாம்சம் பெற்றுத்தர வேண்டும். என்றார்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்