×

கேரளா சென்ற ரயிலில் கடத்தல் 14 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் கைது

சேலம், ஏப். 7: சேலம் வழியே கேரளாவிற்கு சென்ற ரயிலில் 14 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது. இக்கடத்தலை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தமிழக ரயில்வே போலீசார், தனிப்படைகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் ரயில்வே போலீஸ் தனிப்படையை சேர்ந்த ஏட்டு ராமன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரசில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஏறி சேலம் வரை ஒவ்வொரு பெட்டியாக சோதித்தனர்.
இதில், எஸ்-11 பெட்டியில் சந்தேகப்படும் படி பெரிய அளவில் பேக் வைத்திருந்த நபரை பிடித்து, அதனை சோதனையிட்டனர். அதனுள் 14 கிலோ கஞ்சா, 9 பார்சல்களில் கட்டப்பட்டு இருந்தது. உடனே அதனை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் அந்த நபர், ஒடிசா மாநிலம் தண்டாபாடி பகுதியை சேர்ந்த தாஸ்வடகா (20) என்பது தெரியவந்தது. இவர், ஒடிசா மாநிலம் பெலாங்கிரில் இருந்து கோவைக்கு கொண்டு சென்றதும், அதற்காக ரயிலில் அபராதம் கட்டி பயணம் செய்ததும் தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags : Odisha ,Kerala ,
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை