கரூர், மார்ச் 25: கரூர் நகரத்தில் உள்ள பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக காசநோய் தின விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாநகராட்சி மேயர் கவிதா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24ம்தேதி உலக காச நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காசநோய் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கரூர் மாவட்டத்தில் காசநோய் பாதிப்பில் அளவில் இருந்து 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக கரூர் மாவட்டம் தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளது. மேலும், தொடர்ந்து காசநோய் பாதிப்பின் அளவை குறைப்பதற்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றார்.
முன்னதாக, கரூர் மாவட்டத்தில் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், களப்பணியாளர்களுக்கு கலெக்டர் நினைவுப் பரிசு வழங்கினார். மேலும், காசநோய் விழிப்புணர்வு போட்டியில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது முறையே இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குநர் சந்தோஷ்குமார், துணை இயக்குநர் (காசநோய்) சரவணன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.