ராமநாதபுரம், மார்ச்1: சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவாலயங்களில் நடப்பாண்டு முதல் நாட்டியாஞ்சலி நடத்த அனுமதியளித்த தமிழக அரசுக்கு நன்றி என கலை பண்பாட்டு துறை கலையியல் முன்னாள் அறிவுரைஞர் பூர்ண புஷ்கலா தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம், ஸ்ரீரங்கம் பரத கலா அகாடமி சார்பில் உத்திரகோசமங்கை மகாசிவராத்திரி கலை விழா இன்றிரவு மாலை 6 மணிக்கு துவங்கி நாளை (மார்ச் 2) காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக நடைபெறும் இவ்விழாவில் சென்னை, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மும்பை நகரங்களைச் சேர்ந்த கலைஞர்களின் பரதம், கதகளி, குச்சுபுடி உள்ளிட்ட நாட்டியாஞ்சலி நடைபெற உள்ளது. சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவாலயங்களில் நடப்பாண்டு முதல் நாட்டியாஞ்சலி நடத்த அனுமதியளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
கலெக்டர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அரங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், ராஜா வீர ராஜ்குமார், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தக்கார் குமரன் சேதுபதி, திமுக தலைமை வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான், கற்பூர சுந்தர பாண்டியன், திவான் பழனிவேல் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்கின்றனர் என்றார்.