திருவாரூர், பிப்.3: மாவட்ட காவல்துறை சார்பில் திருவாரூர் அருகே அகரத்திருநல்லூரில் கிராமப்புற நூலகம் திறப்பு விழா நடந்தது. திருவாரூர் தாலுகா அகரத்திருநல்லூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் புதிய நூலகத்தினை எஸ்பி விஜயகுமார் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களது கல்வி அறிவை பெருக்கிக் கொள்ளும் விதமாகவும், நல்ல வேலை வாய்ப்புகளில் சேர உதவி செய்யும் வகையிலும் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இந்த நூலகமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். நூலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த எஸ்பி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.