குறிப்பிட்ட தேதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோட்டாட்சியரிடம் கவுன்சிலர்கள் மனு

விருத்தாசலம், ஜன. 22: விருத்தாசலம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் திமுக, அதிமுக, பாமக, சுயேட்சை உள்ளிட்ட 15 கவுன்சிலர்கள், கடந்த மாதம் 29ம் தேதி ஒன்றிய சேர்மன் செல்லதுரை மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில், வரும் 24ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பு தேதி குறிப்பிடாமல், தள்ளி வைத்துள்ளதாக அனைத்து கவுன்சிலர்களுக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால், 7 ஒன்றிய கவுன்சிலர்கள் நேற்று மீண்டும் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், திட்டமிட்ட தேதியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில், 20 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றி வாக்கெடுப்பு நடத்தலாம். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் ஒன்றிய கவுன்சிலர்கள், பரிசோதனை செய்த பின்பு அவர்களை அனுமதிக்கலாம்.குறிப்பிட்ட தேதியில் வாக்கெடுப்பு நடத்தாவிட்டால், ஒன்றிய கவுன்சிலர்கள், அவர்களது பகுதியில் உள்ள பொது மக்களை அழைத்து வந்து ஒன்றிய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட போவதாக குறிப்பிட்டிருந்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories:

கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு புதுச்சேரி, மே 22: கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை வேதனையுடன் தெரிவித்தார். ஜி20 தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகளில் நேற்று கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நீடித்த, நிலையான கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கடல்சார் மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டறியவும், இதுதொடர்பாக ஜி20 நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனைத்து கடல்சார் மாநிலங்களிலும் கடற்கரைத் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மற்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:நிலத்திலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்த கடலில் கொட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் உணவுக்காக மாறி பின்பு நாமே மீன்களை உண்கிறோம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சுகாதார கேட்டினால் ஏற்படும் நோய்களை தடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சார்ந்த மாநிலம். எனவே, புதுச்சேரியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிச்சயமாக கொண்டு வர வேண்டும். கடலை சுத்தப்படுத்துவதன் மூலமாக நமது குடலும் சுத்தப்படுத்தப்படுகிறது. நிச்சயமாக இது இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கவர்னர் உறுதிமொழி வாசிக்க, அதனை அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து, தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் பேரணியை கவர்னர் தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுச்சூழல் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். சபாநாயகர் செல்வம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.