×

பட்டிவீரன்பட்டி வயல்களில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு நேரம் மிச்சமாவதாக விவசாயிகள் தகவல்

பட்டிவீரன்பட்டி, ஜன.20: பட்டிவீரன்பட்டி அருகே வயல்களில் டிரோன் மூலமாக மருந்தடிக்கும் பணி நடைபெறுகிறது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள தாமரைகுளம், கருங்குளம், ரெங்கசமுத்திரம் போன்ற குளங்களில் உள்ள நீரைக்கொண்டு பட்டிவீரன்பட்டி, அய்யன்கோட்டை, நெல்லூர், ரெங்கராஜபுரம் காலனி, அய்யம்பாளையம் கால்பரவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் கோ 51, கோ 43, கோ 45 மற்றும் ஐ.ஆர் 20 போன்ற 4 வகையான நெல் ரகங்கள் பயிடப்பட்டுள்ளன. இதில் கோ 51, கோ 45 ஆகிய 2 ரகங்களும் 120 நாட்களில் விளையும், கோ 51 ரகம் 130 நாட்களில் விளையும். தற்போது முதல் போக சாகுபடிக்காக நெல் பயிரிட்டுள்ளது. இந்த வருடம் நெல் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அமோக விளைச்சலுக்கு வாய்ப்புள்ளதாகவும் நெல்விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி நெல்லூரை சேர்ந்த நெல் விவசாயி வடிவேல் கூறுகையில், இந்த வருடம் நல்ல மழை பெய்துள்ளதால், நெல்லுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லை. இதனால் சென்ற வருடத்தைக் காட்டிலும் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. தற்போது இப்பகுதியில் முதல் முறையாக டிரோன் மூலமாக நெற்பயிருக்கு மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகின்றது. இதனால் மருந்து வீணாகாமல் சரியாக தெளிக்கப்படுகின்றது. 5 நிமிடத்தில் 1 ஏக்கர் பயிருக்கு தெளிக்கின்றனர்.
மேலும் இதற்கு குறைவான தண்ணீரே செலவாகும். மருந்தும் பரவலாக தெளிக்கப்படுகின்றது. இம்முறையில் மருந்து தெளித்தால், விளைச்சல் அதிகரிக்கும். மற்ற முறையில் மருந்து தெளிப்பதை விட இம்முறையில் மருந்து தெளிப்பது பயிர்கள் முழுமைக்கும் தெளிக்கப்படுகின்றது. நேரமும் மிச்சமாகிறது என்றார்.

Tags : Pattiviranapatti ,
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே பப்பாளி...