×

ஆரணி அருகே பரிதாபம் பைக்குகள் நேருக்குநேர் மோதி 2 பேர் பலி ஒருவர் படுகாயம்

ஆரணி, டிச.31: ஆரணி அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதி கொண்டதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஜலகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி(21). சென்னை ஒரகடம் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் தினமும் ஆரணிக்கு பைக்கில் வந்து, அங்கிருந்து கம்பெனி பஸ்சில் வேலைக்கு சென்று வருவார். வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு ஆரணி வந்து இரவு பைக்கில் வீடு திரும்பினார். ஆரணி- சந்தவாசல் சாலையில் பார்வதி நகர் அருகே சென்றபோது எதிரே குன்றுமேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாஸ்கர்(28), ராமநாதபுரம் மேலாண்டபுரத்தை சேர்ந்த சங்கர்(38) ஆகியோர் வந்த பைக்கும், கார்த்தியின் பைக்கும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கார்த்தி, பாஸ்கர், சங்கர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்றவர்கள், படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கார்த்தி, பாஸ்கர் ஆகியோர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சங்கர் வேலூர் அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான பாஸ்கருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். கார்த்திக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Tags : Arani ,
× RELATED ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த...