கூடலூர்: ஆந்திர மாநிலத்தில் உள்ள அகில பாரத ஐயப்ப சேவா பிரசார சங்கத்தை சேர்ந்தவர் சுரேஷ் (40), ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி. தங்கநகை வேலை செய்கிறார். இவர், நாட்டில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என ஊன்றுகோல் உதவியுடன் ஆந்திராவிலிருந்து கால்நடையாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். கடந்த செப்.21ம் தேதி இருமுடியுடன் சொந்த ஊரிலிருந்து கால்நடையாக தன் பயணத்தை துவக்கிய இவர், நேற்று 72வது நாளில் கம்பம் வந்தார். கம்பம் கூடலூர் எல்லைப்பகுதியில், தேனி மாவட்ட ஐயப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்த குருசாமி கதிரேசன் தலைமையில் அவருக்கு வரவேற்பு கொடுத்து, துணைக்கு ஒரு ஐயப்ப பக்தருடன் அவரை கோயிலுக்கு வழியனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஐயப்ப பக்தர் சுரேஷ் கூறுகையில், கொரோனா, ஒமிக்ரான் போன்ற தொற்று நோய்கள் நீங்கி நாட்டில் அனைவரும் நலமுடன் வாழவேண்டும் என்ற வேண்டுதலோடு செப்.21ல் கிளம்பினேன். 72வது நாளில் கம்பம் வந்துள்ளேன். ஜன.5ல் சபரிமலை செல்வதாக முடிவுசெய்துள்ளேன். ஆந்திராவிலிருந்து கிளம்பிய எனக்கு தமிழகத்தில் ஆங்காங்கே இரவு நேரம் தங்க இடம் ஏற்பாடு செய்து கொடுத்ததும், வரவேற்றதும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.