ஒடுகத்தூர், டிச.24: ஒடுகத்தூர் அடுத்த அகரம் ஊராட்சியில் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி கட்டிடத்தை மாவட்ட சேர்மன் ஆய்வு செய்து அதனை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நாடு முழுவதும் ஆங்காங்கே உள்ள பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையங்களில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து விழும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இதனால், பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்களின் கட்டிடத்தின் உறுதி தன்மை ஆய்வு செய்து அதனை இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் தனியார் பள்ளி கட்டிடங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒடுகத்தூர் அடுத்த அகரம் ஊராட்சியில் எல்லப்பன்கொட்டாய் பகுதியில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் தற்போது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், இதனை, மாவட்ட சேர்மன் மு.பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அதனை உடனடியாக இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, பிடிஓ கனகராஜ், கவுன்சிலர் சுதாகர், வார்டு உறுப்பினர் அரி உட்பட பலர் உடன் இருந்தனர்.