சேலம், ஏப்.17:சேலம் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. இந்த தேர்தலில், 1,313 பேர் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. தலைவர், செயலாளர், துணை தலைவர், உதவி செயலாளர், நூலகர், செயற்குழு உறுப்பினர்கள் என 17பதவிகளுக்கு 41பேர் போட்டியிட்டனர். பொருளாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பாபு என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் மணிவாசகம் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் முன் நேற்று காலை 9மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடந்தது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் வக்கீலுமான ராஜேந்திரன், பார்த்திபன் எம்பி ஆகியோர் வாக்களித்தனர்.
நேற்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. 1313 ஓட்டுக்களில் 1215 பேர் வாக்களித்தனர். இதையடுத்து மாலை 6 மணி முதல் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில், தலைவராக முத்துசாமி 614 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். துணை தலைவராக விஸ்வநாதன் 419 ஓட்டுகளும், செயலாளர் பதவிக்கு முத்தமிழ்செல்வன் 919 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர். மேலும், நூலகர், செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.