×

சேலம் சிறை எஸ்.பி. பங்களா வாசல் எதிரே மரத்தில் டூவீலர் மோதி ஆசிரியை கணவர் பலி அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

சேலம், ஏப் 10: சேலத்தில் எஸ்.பி.பங்களா வாசல் அருகே ரோட்டில் உள்ள மரத்தில் டூவீலர் மோதி ஆசிரியை கணவர் பலியானார்.  சேலம் அஸ்தம்பட்டி பாரதிநகரை சேர்ந்தவர் சிவக்குமார்(46). டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வித்யா(40), தனியார் ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 18, 13 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். சிவக்குமார்  நேற்றுமுன்தினம் இரவு டூவீலரில் கோரிமேடு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.சேலம் மத்திய சிறை அருகே எஸ்.பி. பங்களா வாசலின் எதிர்பகுதியில், ஏற்காடு மெயின்ரோட்டில் 3 மரங்கள் இருக்கிறது. சற்றுவளைவான பகுதியில் அந்த மரங்கள் ரோட்டில் உள்ளது.  டூவீலரில் வந்த சிவக்குமார் எதிர்பாராத வகையில், மரத்தில் மோதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். உடலை பார்த்து மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரோட்டில் நிற்கும் இந்த 3 மரங்களையும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக கூறி அப்புறப்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்ைக விடுத்தனர். ஆனால் மரத்தை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வரவில்லை. வளைவான பகுதில் ஆபத்தை உருவாக்கும் என தெரிந்தும் மரத்தை அப்புறப்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Salem ,prison S. RB ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...