×

மந்த கதியில் வத்தல்மலை சாலை விரிவாக்க பணிகள்

தர்மபுரி, ஏப்.9: தர்மபுரி வத்தல்மலை சாலை அகலப்படுத்தும் பணி கடந்த ஒருமாதத்திற்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தர்மபுரி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் வத்தல்மலை அமைந்துள்ளது. வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளினூர், நாயக்கனூர், அரங்கனூர் உள்ளிட்ட 13 மலைக் கிராமங்கள் உள்ளன. பழங்குடி மக்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் குறைந்த வெப்ப நிலை நிலவி வருவதால், சில்வர்ஓக் மரங்கள், காபி பயிர் சாகுபடி பரவலாக காணப்படுகின்றன. மேலும் சோளம், கேழ்வரகு, சாமை போன்ற பயிர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வத்தல்மலை அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக, சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வத்தல்மலைப் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு 2011ம் ஆண்டு வரையும் சாலை வசதி கிடையாது.

வத்தல்மலை கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக, நடந்து வந்து, அடிவாரத்தில் இருந்து பஸ் மூலம் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். கடந்த 2011-2012ம் ஆண்டு அடிவாரத்தில் இருந்து வத்தல்மலை மேல் பகுதி வரையும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை சார்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்து 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலை அமைத்த பிறகு, தங்களுக்கு பஸ்வசதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், மலைவாழ்மக்கள் இருந்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. கொண்டை ஊசி வளைவில் மினிபஸ் கூட திரும்ப முடியாத வகையில், சாலை குறுகலாக அமைக்கப்பட்டது. இதனால் இருசக்கர வாகனம், கார், ஜீப் போன்ற சிறிய வாகனங்கள் மட்டுமே இந்த சாலையில் சென்று வருகின்றன. இந்நிலையில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில், அன்னசாகரம்- கொமத்தம்பட்டி, நாய்க்கனூர் சாலை வழியாக சின்னங்காடு, ஒன்றியகாடு பால்சிலம்பு, வத்தல்மலை பெரியூர்சாலை வலுப்படுத்தும் பணி, 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. அடிவாரத்தில் இருந்து வத்தல்மலை உச்சி வரை 23 கொண்டை ஊசி வளைவிலும், மினிபஸ் இயக்கி திரும்பும் வகையில், சாலை அகலப்படுத்தி தடுப்புசுவர் அமைக்கும் பணிகள் நடந்தது.

இந்நிலையில், பணிகள் முழுமை அடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல், வத்தல்மலை மக்கள் நடந்து சென்று வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் குறுகலான சாலை அமைக்கப்பட்டதால், மினிபஸ் வசதி இல்லாமல் போனது. வத்தல்மலை மேல்பரப்பில் இருந்து தர்மபுரிக்கு ஒரு ஜீப்பில் சென்று வர ₹140 வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், சாலை அகலப்படுத்தும் பணியும் தற்போது கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, கலெக்டர் ஆய்வு செய்து சாலை பணியை விரைவுபடுத்த வேண்டும், என்றனர்.

Tags : Wattalmalai ,
× RELATED மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக...