சேலம், ஏப்.3: சேலம் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ., நேற்று அஸ்தம்பட்டி, மணக்காடு, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் தீவிரபிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது: சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினராக 10 ஆண்டுகளாக இருக்கிறேன். இதில் மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளேன். எனது தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, திருவாகவுண்டனூர், ஏவிஆர் ரவுண்டானா, சேகோசர்வ் - ஸ்டீல் பிளாண்ட், 5ரோடு முதல் அஸ்தம்பட்டி வரை, 5ரோடு முதல் 4வரை, கந்தம்பட்டி- சிவதாபுரம், லீபஜார்- செவ்வாய் பேட்டை ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டி கொடுத்துள்ளேன். அதே போல வடக்கு தொகுதியிலும் நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவேன். மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாக்கடை வசதியை செய்து கொடுப்பேன். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். சேலம் மக்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பினால் தான் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவரது ஆட்சி தொடரும் வகையில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.