×

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 600 துணை ராணுவ வீரர்கள் பிரித்து அனுப்பி வைப்பு தொகுதி வாரியாக 15 பேர் சிறப்பு குழு நியமனம்

வேலூர், ஏப்.1: வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 600 துணை ராணுவ படையினர் பிரித்து அனுப்பி வைத்து, பறக்கும்படை, கண்காணிப்பு குழுவில் ஈடுபடுத்தி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய 5 சட்டமன்ற ேதர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காகவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமிரா பொருத்தி கண்காணிக்கவும் தேர்தல் ஆணயைம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் வேலூருக்கு வந்தனர். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்தனர். அதன்படி தேர்தல் பணிக்காக வந்துள்ள மொத்தம் 7 கம்பெனிகளை சேர்ந்த 600 துணை ராணுவப்படையினர் வேலூர், காட்பாடியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் துணை ராணுவப்படையினரை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கும் பணியில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி தொகுதிக்கு 120 வீரர்கள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தேர்தல் நடக்கும் வரை வாகன சோதனையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினருடன் சேர்ந்து வாகன சோதனை நடத்துவது, சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நாளன்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். இவர்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் 15 பேர் கொண்ட ஒரு குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர், தொகுதிகளில் மிக அவசர கால தேவைக்கு ஏற்ப அப்பகுதிக்கு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore district ,
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்