×

செய்யாறு அருகே பிஸ்கட் வியாபாரியிடம் ₹1 லட்சம் பறிமுதல்

செய்யாறு, மார்ச் 31: செய்யாறு அருகே பிஸ்கட் வியாபாரியிடம் ₹1 லட்சம் ரொக்கத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று பறிமுதல் செய்தனர். செய்யாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் ஏ.மணிகண்டன் மற்றும் போலீசார் ரமேஷ், ஜெயக்குமார், காயத்ரி ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று மாலை காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் அப்துல்லாபுரம் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஆட்டோவில் வந்த பிஸ்கட் வியாபாரி உத்திரமேரூர் வட்டம், திருப்புலிவனம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்(35) என்பவரிடம் ₹1 லட்சத்து 6 ஆயிரத்து 650ஐ இருப்பது தெரியவந்தது. கடைகளில் சரக்கு சப்ளை செய்ததில் வசூலான பணத்தை கொண்டு செல்வதாக சதீஷ்குமார் தெரிவித்தார். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ₹1.60 லட்சத்தை பறிமுதல் செய்து, செய்யாறு தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தாசில்தார் சு.திருமலையிடம் ஒப்படைத்தனர்.

Tags : Seiyaru ,
× RELATED உலக மலேரியா தின விழிப்புணர்வு...