வருசநாடு, மார்ச் 12: கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர் புதுக்குளம் கண்மாய், செங்குளம்கண்மாய், கெங்கன்குளம், கோவிலாங்குளம், சிறுகுளம் கண்மாய், கடமான்குளம் பெரியகுளம் கண்மாய், மந்திசுனை சாந்தனநேரி கண்மாய் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கண்மாய்களில் தனி நபர்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்து தென்னை, கொட்டை முந்திரி, இலவமரம், தட்டப்பயிறு, மொச்சை உள்ளிட்ட விவசாயம் செய்கின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர் அங்குசாமி கூறுகையில்,`` கடமலை - மயிலை ஒன்றியத்தில் ஒரு சில கண்மாய்களில் மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்றியுள்ளனர். மீதமுள்ள கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். இதற்கு தேனி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.