கிருஷ்ணகிரி, ஜூலை 6: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 22 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளை 5,603 பேர் எழுதினர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், தொடர்ந்து பணியில் நீடிக்க வேண்டுமானால், 3 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளும், நேற்று 6 முதல் 10ம் வகுப்பு வரை பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2ம் தாள் தேர்வு நடந்தது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், குருபரப்பள்ளி, ஜெகதேவி, வேப்பனஹள்ளி, குந்தாரப்பள்ளி, எலத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 22 மையங்களில் தேர்வு நடந்தது. நேற்று நடந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு 5,603 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,398 பேர் தேர்வெழுதினர். 205 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு அறைக்குள் பெல்ட், ஷூ, ஹை ஹீல்ஸ், டிஜிட்டல் வாட்ச் அணியவும், செல்போன், மைக்ரோபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தடை விதித்திருந்தது.
