×

இந்தியாவின் தேசிய விலங்கு ராயல் வங்க புலி; நம்நாட்டு பெருமையின் ஓர் அங்கம்: சூழல் அமைப்புகளில் முக்கிய பங்கு

 

இந்தியாவின் தேசிய விலங்கு ராயல் வங்காள புலி (Royal Bengal Tiger).அதன் கம்பீரம், வலிமை, சுறுசுறுப்பு மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 1973ல் இது தேசிய விலங்காக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர் பாந்தெரா டைகிரிஸ் (Panthera tigris)என்பதாகும். 1972ம் ஆண்டு வரை சிங்கமே இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது. அதன் பின்னரே புலி தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. உயிரியல், குறியீட்டு முக்கியத்துவம், வரலாற்று பின்னணி மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த காரணங்களுக்காக, இந்தியா புலியை தனது தேசிய விலங்காக தேர்ந்தெடுத்தது.

தேசிய விலங்காக தேர்வுபெறும் விலங்கு பலம், பாரம்பரியத்தை பறைசாற்ற வேண்டும். கம்பீரமாக காட்சி தர வேண்டும். அதுவே, தேசத்தின் அங்கீகாரமாக திகழும். இதற்கு உகந்ததாக ராயல் பெங்கால் புலி 1972ல் தேர்வு செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வமாக 1973ல், தேசிய விலங்காக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா மட்டுமின்றி, அண்டை நாடான வங்க தேசம், ஆசிய நாடுகளான தென் கொரியா, வியட்நாம் மற்றும் மலேசியாவுக்கும் தேசிய விலங்காக புலியே விளங்குகின்றன.

பண்டைய நாணயங்கள், கோயில் சிற்பங்கள் முதல் முகலாய ஓவியங்கள் மற்றும் பழங்குடியினரின் கதைகள் வரை, பல்வேறு பிராந்தியங்கள், காலகட்டங்களில் உள்ள இந்திய புராணங்கள், நாட்டுப்புற கதைகள், அரச சின்னங்கள் மற்றும் கலைகளில் புலிகள் நீக்கமற இடம்பெற்றுள்ளன. பல இந்திய மரபுகளில் இது சக்தி, அரசத்துவம், தைரியம் மற்றும் கம்பீரத்தின் சின்னமாக விளங்குகிறது. புலிகள் ஒருகாலத்தில் சதுப்புநில காடுகள், புல்வெளிகள், இலையுதிர் மற்றும் பசுமை மாறாக் காடுகள் போன்ற இந்தியாவின் பல்வேறு வாழ்விடங்களில் பரவலாக காணப்பட்டன. இதனால் அவை ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது சமூகத்துடன் மட்டும் பிணைக்கப்படாமல், அகில இந்திய சின்னமாக திகழ்ந்தன.

புலியின் தனித்துவமான தோற்றம் பார்வைக்கும், உணர்வுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு தேசிய சின்னமாக விளங்குகிறது. இந்திய புராணங்களிலும், நாட்டுப்புற கதைகளிலும் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் புலி 16 மாநிலங்களில் காணப்படுகின்றன. ஆனால் சிங்கமோ கிர் காட்டில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த விலங்கின் உலகளாவிய முக்கியத்துவத்தாலும், அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தாலும், ஆசிய சிங்கத்திற்கு பதிலாக புலி தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தியாவில் 18 மாநிலங்களில் 46 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

அழியும் தருவாயில் உள்ள புலிகளை பாதுகாப்பதற்காக இந்திய அரசு 1973ம் ஆண்டில் ‘புராஜெக்ட் டைகர்’ என்ற திட்டத்தை தொடங்கியது. இந்தியாவின் பல்லுயிர் செல்வத்தையும், நாட்டின் இயற்கை பாரம்பரியத்தையும் குறிக்கும் சின்னமாக இது திகழ்கிறது. அழகும், பலமும், சுறுசுறுப்பும், அளவிட முடியாத வலிமையும் கொண்டு விளங்கும் விலங்கான புலி, எல்லோராலும் மதிப்பு மிக்கதாகவும் உயர்வாகவும் கருதப்படுகிறது. புலிகள் இந்திய பெருமையின் ஓர் அங்கமாகவும், தேசிய சின்னமாகவும் திகழ்கின்றன. இந்த விலங்கு மிகவும் உயர்ந்த அந்தஸ்தை கொண்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்ததால், புலி தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது வரலாறு முழுவதும் தொடர்ந்தது. புலியானது கவர்ச்சிகரமான இனமாகவும், ஒரு தேசிய சின்னத்திற்கு ஏற்றவாறு பொதுமக்களின் ஆர்வத்தையும், பெருமையையும் ஈர்க்கிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், புலிகள் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. புலி தன் எல்லை பகுதியில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் குணம் கொண்டது. எனவே, அதை ஒரு புதிய சூழலில் அறிமுகப்படுத்தினால், பெரும்பாலும் பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும், கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்டால், அவை மனிதர்களையும் கணிசமாக தாக்கக்கூடும். பூனை குடும்ப விலங்குகளிலேயே புலிகளே மிகப்பெரியவை.

அவை எளிதில் கண்ணில் படாத உயிரினங்கள். பாய்வதற்கும், நீந்துவதற்கும் மற்றும் தாவி செல்வதற்கும் பெயர் பெற்றவை. கருப்பு கோடுகளுடன் கூடிய நீண்ட வால் மற்றும் ஆரஞ்சு நிற உரோமம் போன்ற பல சிறப்பம்சங்களையும் அவை கொண்டுள்ளன. புலிகள் நேபாளத்திலும் காணப்படுகின்றன. அங்கு அவை புனிதமான விலங்குகளாக கருதப்படுகின்றன. புலிகள் வெப்ப மண்டல காடுகளிலும், புல்வெளிகளிலும் வாழ்கின்றன. மலைகளிலும், சதுப்பு நிலங்களிலும்கூட அவை வாழ்கின்றன.

வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மனிதர்களுடனான மோதல்கள் ஆகியவற்றால் புலிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது. புலிகள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில் வாழ்கின்றன. இந்தியாவை தவிர, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகள், மலேசியா மற்றும் ரஷ்யாவிலும் புலிகள் காணப்படுகின்றன. புலிகள் குட்டியாக இருக்கும்போது தங்கள் தாயுடன் குகை மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில் வாழ்கின்றன. அவை வளர்ந்த பிறகு தங்கள் பெரும்பாலான நேரத்தை உணவு வேட்டையாடுவதில் செலவிடுகின்றன. குட்டிகள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் அளவுக்கு வளரும்வரை அவற்றை பராமரிக்கவும் செய்கின்றன.

புலிகள் உச்ச வேட்டையாடிகளாக கருதப்படுகின்றன. உணவு சங்கிலியில் புலிவேட்டை முதலிடத்தில் உள்ளது. அவற்றுக்கு தற்காப்பு உணர்வும், வலிமையான உடல் வலிமையும் உள்ளது. புலிகள் எப்போதும் ஏதோ ஒருவிதமான போட்டி நிலவும் ஒரு சூழல் மண்டலத்தில் வாழ்கின்றன. புலிகள் உலகின் சூழல் அமைப்புகளின் இன்றியமையாத அங்கமாகும். அவை அழிந்துவிட்டால், சூழல் அமைப்பு சீர்குலைந்துவிடும். அதனால் பூமியில் உள்ள உயிரினங்களால் நிலைத்து வாழ இயலாமல் போய்விடும். புலிகள் தனித்துவமான, பிரம்மாண்டமான பூனை இனமாகும். அவற்றின் அளவு, வேட்டையாடும் திறன் மற்றும் வலிமையின் காரணமாக அவை ‘காட்டின் ராஜா’ என்று அழைக்கப்படுகின்றன. கூட்டமாக வாழும் மான்கள், புலிகளுக்கு பொதுவான இரையாகும்.

புலிகள் இயற்கையின் ஒரு அங்கமாகும். அவை 8 முதல் 10 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. மிகவும் தகவமைத்து கொள்ளும் திறன் கொண்டவை. 20க்கும் மேற்பட்ட உடல் அசைவுகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வாழ்விடத்திலும் அதற்கென ஒரு புலி இனம் உள்ளது
புலிகள் சூழல் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிப்பதாலும், அவற்றின் சுற்றுச்சூழலை ஒழுங்குபடுத்த உதவுவதாலும், அவற்றை பாதுகாப்பது அவசியமாகும். மேலும், வேறு சுற்றுலா தலங்கள் இல்லாத பகுதிகளுக்கு மக்களை ஈர்க்கும் முக்கிய கவர்ச்சிகளில் ஒன்றாக இருப்பதால், புலிகள் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும் மனித – வனவிலங்கு மோதல்கள் காரணமாக புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் இருந்தபோதிலும், புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை தவிர்த்து புலிகளை பாதுகாப்போம்.

ஆரஞ்சு நிற மற்றும் அடர் கருப்பு கோடுகளுடன் கம்பீரத்தையும், அழகையும் வெளிப்படுத்தும் புலிகள் இந்தியாவின் தேசிய விலங்கு எனும் பெருமைக்குரிய உயிரினமாகும். ஆனால் காலப்போக்கில் தோல், பல், முடி என பலவகை காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு புலிகளின் எண்ணிக்கை வெகுவாக உலக அளவில் குறைந்து வந்தது. இந்தியா தனது தேசிய விலங்கான புலிகளை காப்பாற்றி காடுகளின் வளத்தை காக்க, தீவிர முயற்சியில் இறங்கி, தற்போது அதில் அதீத வெற்றி கண்டுள்ளது!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய மதிப்பீடுகளின்படி 2010ல் 1,706 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022ல் 3,682 ஆக உயர்ந்துள்ளது. இது உலக புலிகள் எண்ணிக்கையில் இந்தியாவை சுமார் 75 சதவீதமாக தாயகமாக்கி உள்ளது. புலிகளின் வாழ்விடங்களுக்கு அருகிலுள்ள சில உள்ளூர் சமூகங்களும், மக்கள் நடமாட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவால் ஏற்படும் வருவாய் காரணமாக புலிகளின் அதிகரிப்பால் பயனடைந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக இந்தியாவில் சிங்கங்களுக்கு இரண்டு விதமான சூழல்கள் இருந்தன.ஆசிய சிங்கம் (Panthera leo persica) தற்போது குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதிக்குள் மட்டுமே காணப்படுகின்றன.

இதன் தற்போதைய பரவல் மிகவும் குறுகியதாக இருப்பதால், இது முழு துணைக்கண்டத்தின் பிரதிநிதியாக குறைவாகவே விளங்குகிறது. அடுத்தது ஆப்பிரிக்க சிங்கம்; இது இந்தியாவை பூர்வீகமாக கொண்டதல்ல. எனவே கலாசார ரீதியாகவோ அல்லது சூழலியல் ரீதியாகவோ இதன் முக்கியத்துவம் குறைவு. ஆசிய சிங்கம் ஒரே ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே வாழ்வதால், அது அகில இந்திய தன்மையை காட்டிலும், ஒரு பிராந்திய தன்மையை கொண்டுள்ளது. ஒரு தேசிய விலங்கு பொதுவாக ஒரு தேசத்தை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

சிங்கங்கள் அரசாட்சி மற்றும் வலிமையின் உலகளாவிய சின்னங்களாகும். மேலும் அவை ஏற்கனவே அரசு சின்னங்கள், அரச முத்திரைகள் மற்றும் பண்டைய சிற்பங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தன. அந்த சின்னம் ஏற்கனவே ‘அரசின் அதிகாரத்தின் சின்னமாக சிங்கம்’ என்ற பங்கை நிறைவேற்றுவதால், ஒரு பெரிய மாமிச உண்ணி சிங்கத்தை தேசிய விலங்காக தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை குறைகிறது. ஆசிய சிங்கத்தின் பாதுகாப்பு முக்கியமானது என்றாலும், புலியின் பரந்த வரலாற்று வாழிட வரம்பும், ஒரு குடை இனமாக அதன் பெரும் பங்கும், தேசிய பாதுகாப்பு முன்னுரிமைக்கு அதனை ஒரு வலுவான தேர்வாக ஆக்கியுள்ளன.

இந்தியா முழுவதும் ஆழமான கலாசார தாக்கம், கண்ணை கவரும் தனித்துவமான அடையாளம், அகில இந்திய வரலாற்று பரவல், மற்றும் பொதுக்கொள்கையை திரட்டிய மிக முக்கியமான பாதுகாப்பு முக்கியத்துவம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டிருப்பதால் புலி தேர்ந்தெடுக்கப்பட்டது. நம் வாழ்க்கை குறிக்கோள்களை அடைய உழைக்கும்போது, புலியைப்போல விழிப்போடு, துரிதமாக செயல்பட முயற்சி செய்ய வேண்டும்.

புலிகள் ஏன் முக்கியமானவை?
புலிகள் ஒரு ஆதார இனமாகும். அதாவது அவை தாங்கள் வாழும் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.உயர்நிலை வேட்டையாடிகளாக, அவை தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை பராமரிக்கவும், நோய்களை குறைக்கவும், அதிகப்படியான மேய்ச்சலை தடுக்கவும் உதவுகின்றன. அவற்றுக்கு அதிக இடம் தேவைப்படுவதால், புலிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதன் மூலம், நாம் பல பிற உயிரினங்களையும் பாதுகாக்க முடியும்.

Tags : India ,
× RELATED சிறப்பறிந்து பயன்படுத்தி மகிழ்வோம்;...