அறந்தாங்கி, ஏப்.14: அறந்தாங்கி அடுத்த மீமிசலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தேர்தல் நடத்தும் அலுவலர் அபிநயா தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கிராமத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஏப்பல் 23 ம்தேதி தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா நடைபெற உள்ளது. இந்தநாளில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்தி வருகிறது. அறந்தாங்கி தொகுதியில் 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் வாக்காளர்களிடையே பேரணிகள், நிகழ்ச்சிகள், போட்டிகள், ரங்கோலிகள், மகளிர் சுய உதவிக்குழு சந்திப்பு என்று பல்வேறு கட்ட முயற்சிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக 183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான அபிநயா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தனியார் அறக்கட்டளையினர் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று, தங்களது தனி திறனை வெளிக்காட்டும் விதமாக சிலம்பாட்டம், கராத்தே போன்ற பல்வேறு வித்தைகளை செய்து அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும், உங்கள் வாக்கு உங்கள் உரிமை என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆவுடையார் கோவில் தனி வட்டாட்சியர் சுரேஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வர்த்தக சங்க பொறுப்பாளர்கள், செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் மாணவர்களின் திறமைகளை பாராட்டி அவர்களுக்கு வருவாய்க் கோட்டாட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
