*கீழே விழுந்ததாக நாடகமாடியது அம்பலம்
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே மனைவியை அடித்து கொலை செய்து விட்டு, தவறி விழுந்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகேபாய் தொட்டி கிராமத்தில் வசிப்பவர் முனிராஜ்(38), கூலி தொழிலாளி. இவரது மனைவி சவிதா(35). சவிதா கடந்த 20ம் தேதி கீழே விழுந்து விட்டதாக கூறி, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 21ம் தேதி கணவன், மனைவி இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது தன்னுடன் வேலை செய்யும் முருகன் என்பரிடம், கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்ட முனிராஜ், சவிதாவை கட்டையால் அடித்ததில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக இருந்த முனிராஜை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
