×

சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னையை இன்று மக்கள் சந்தித்து வருகிறார்கள். இது போன்ற இக்கட்டான சூழலில் மட்டுமல்ல… பொதுவாகவே நாம் பயன்படுத்தும் சிலிண்டரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

* தண்ணீர் கொதிக்க வைக்க அல்லது பால் காய்ச்ச இண்டக் ஷன் அடுப்பைப் பயன்படுத்தலாம். புகை இல்லாத அடுப்புகளும் மார்க்கெட்டில் உள்ளன, அதனையும் பயன்படுத்தலாம்.

* வெந்நீருக்கு எலக்ட்ரிக் கெட்டில் மார்க்கெட்டில் உள்ளது. அதை பயன்படுத்தலாம். அல்லது வெந்நீரை சூடுபடுத்தி பிளாஸ்க்கில் ஊற்றி வைத்து பருகலாம்.

* சமையலுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மசாலாக்களை தயார் படுத்திக் கொண்டு பிறகு அடுப்பைப் பற்ற வைக்கலாம்.

* ஃபிரிட்ஜில் இருந்து எடுக்கும் பொருட்களை நேரடியாக அடுப்பில் வைக்காமல், அறையின் வெப்ப நிலைக்கு வந்த பிறகு சூடுபடுத்தினால் எரிவாயு செலவு குறையும்.

* உணவுகளை பிரஷர் குக்கரில் சமைப்பதால், 20% முதல் 50% வரை எரிவாயுவை மிச்சப்படுத்தும்.

* பர்னரின் அளவை விட பெரிய பாத்திரங்களை பயன்படுத்துங்கள்.

* பாத்திரங்களை மூடி வைத்து சமைத்தால், உணவு விரைவாக வேகும்.

* அடுப்பின் பர்னர் நீல நிறச் சுடருடன் எரிய வேண்டும். மஞ்சள் நிறத்தில் எரிந்தால் பர்னரில் அடைப்பு இருக்கும். அதனால் எரிவாயு வீணாகும்.

* உணவினை குறைந்த தீயில் வைத்து சமைக்க வேண்டும்.

* அரிசி மற்றும் பருப்பு வகைகளை 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு சமைத்தால், விரைவாக வெந்துவிடும்.

* உணவிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதிகமாக தண்ணீர் சேர்த்தால் அது சுண்ட நீண்ட நேரமாகும்.

* சமைத்து முடித்தவுடன் மறக்காமல் ரெகுலேட்டரை அணைத்து விட வேண்டும். கசிவை தடுப்பதுடன் பாதுகாப்பும் கூட.

* குக்கரில் சாதம் வைக்கும் போதே, அதனுள் சிறிய பாத்திரத்தில் பருப்பு மற்றும் காய்கறிகளையும் வேக வைத்துவிடலாம். நாம் செய்யும் இந்த சின்னச் சின்ன சேமிப்புகள் பேருதவியாக இருக்கும்.

தொகுப்பு: மகி, சென்னை.

Tags :
× RELATED அழகான வரவேற்பு!