×

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அதிகாலை முதலே ஏஜென்சிகளில் பொதுமக்கள் காத்திருப்பு

 

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை லோடு வருவதால், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அதிகாலை காஸ் ஏஜென்சி முன்பாக பொதுமக்கள் காத்திருக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இல்லத்தரசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கத்தில் இருந்து ஊத்துக்காடு வரை செல்லும் சாலையை ஒட்டி தனியார் சிலிண்டர் ஏஜென்ட் செயல்படுகின்றன. இங்கு நாள்தோறும் பதிவு செய்யப்படும் சிலிண்டர்களை சுற்றுவட்டார கிராம மக்கள் இங்கு வந்து பெற்று செல்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது நிலவிவரும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அதிக அளவில் சிலிண்டர் பதிவு செய்யப்படாத நிலையில் பதிவு செய்யப்பட்ட சிலிண்டர்களை பெறுவதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும், பதிவு செய்யப்படும் சிலிண்டர் பெறுவதற்காக ஒரே நேரத்தில் அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கானோர் அந்தந்த காஸ் சிலிண்டர் விநியோகஸ்தர் அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்கதையாக மாறி வருகின்றன. இதற்கான காரணம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே லோடு வருவதாக கூறப்படுகிறது. இதனால், சிலிண்டர் கிடைக்கும் நேரத்திற்கு முன்பே மக்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் பல மணி நேரம் காத்திருப்பதால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவசர தேவைக்காக சிலிண்டர் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும், சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Walajabad ,Kanchipuram district ,Kanchipuram district… ,
× RELATED பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி...