தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ.45 லட்சத்து 98 ஆயிரத்து 55 என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (25.03.2026) வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது; உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ.45 லட்சத்து 98 ஆயிரத்து 55. கைப்பற்றப்பட்ட இலவசப் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 540. பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 911.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்து 500. பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட ரொக்கத் தொகை ரூ.23 லட்சத்து 70 ஆயிரத்து 80. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமலில் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
