×

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா

துரைப்பாக்கம், மார்ச் 21: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சென்னையில் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாக திருவான்மியூர் திருப்பசுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் வருடந்தோறும் பங்குனித் திருவிழா 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவை ஒட்டி வரும் 21ம் தேதி(இன்று) இரவு ஊர் காவல் தெய்வமான ஸ்ரீ செல்லியம்மன் வீதி உலாவும், 22ம்தேதி இரவு ஸ்ரீ விநாயகர் வீதி உலாவும், 23ம் தேதி இரவு 9 மணி அளவில் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் யாகசால பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடக்கிறது.

24ம் தேதி காலை 9 மணி அளவில் சந்திரசேகரன் சூரியபிரபை வாகனத்தில் காமதேனுக்கு காட்சியருளல், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சந்திரசேகர் சந்திரபிரபை வாகனத்தில் காட்சியருளல் மற்றும் தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. 25ம் தேதி காலை 6 மணிக்கு சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு காட்சி அருளல், 8.30 மணிக்கு சந்திரசேகரர் பூத வாகனத்தில் சந்திரனுக்கு காட்சியருளல் மற்றும் தியாகராஜர் 3ம் திருபவனி பார்த்தசாரதிக்கு அருளல் நடைபெறுகிறது. 26ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் புருஷா மிருக வாகனத்தில் புருங்கி முனிவருக்கு காட்சி அருளல், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சந்திரசேகர் நாக வாகனத்தில் காட்சியருளல் மற்றும் 10.30 மணிக்கு தியாகராஜர் 4ம் திருபவனி சந்திரனுக்கு அருளல், 27ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் தொட்டி விழா எமதருமருக்கு அருளல், இரவு 9 மணிக்கு சந்திரசேகர் விடையூர்த்தி காட்சி, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா, இரவு 2 மணிக்கு தியாகராஜர் 5ம் பவனி ராமபிரானுக்கு அருளல்,28ந் தேதி காலை 9 மணிக்கு அருள்மிகு சந்திரசேகர் இரட்சகவிற்கு அருளல் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சந்திரசேகர் யானை வாகனத்தில் காட்சியருளல் மற்றும் தியாகராஜர் 6ஆம் திருபவனி இந்திரனுக்கு அருளல்,29ந் தேதி காலை 7 மணிக்கு அருள்மிகு சந்திரசேகரர் தேர்த்திருவிழா பிரம்மனுக்கு காட்சியர்கள் மற்றும் இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெறுகிறது.

30ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகரன் நான்கு மறைகளுக்கு அருளல், தொடர்ந்து மாலை 6 மணிக்கு சந்திரசேகரர் பரிவேட்டை விழா மற்றும் இரவு ஒரு மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெறுகிறது. 31ம் தேதி பிற்பகல் 1 மணியளவில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம், விமானகாட்சி, தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி, வன்னிமரக்காட்சி மற்றும் இரவு 10 மணிக்கு தியாகராஜர் வீதி உலாவும் நடைபெறுகிறது.
ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணிக்கு சந்திரசேகர் கடல் நீராடல், தொடர்ந்து இரவு 9 மணிக்கு திருபுரசுந்தரி தியாகராஜ சுவாமி திருமண விழா, கொடியிறக்கம், வான்மீகி முனிவருக்கு 18 திருநடன காட்சியருளி வீடுபேறு அளித்தல் பெருஞ்சிறப்பு விழா நடக்கிறது. கடைசி நாள் விழாவாக 2ம் தேதி மாலை 6 மணிக்கு சந்திரசேகரர் தெப்பத் திருவிழாவும், தொடர்ந்து 9 மணிக்கு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலாவும், விடியற்காலை 4.30 மணிக்கு தியாகராஜர் திருபுரசுந்தரி அம்மனுக்கு அருளல், பந்தம்பரி 18 திருநடன காட்சி பெருஞ்சிறப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஸ்டாலின் குமார், உதவி ஆணையர் பாரதிராஜா ஆகியோர் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி ஆலய வளாகத்தில் தினமும் ஆன்மீக சொற்பொழிவும், கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Tags : Thiruvanmiyur Marundeeswarar Temple Panguni Festival ,Duraipakkam ,Thiruvanmiyur Thirupasundari Ambal Udanurai Marundeeswarar Temple ,Chennai ,Panguni Festival ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...