சென்னை, மார்ச் 18: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் திருமண மண்டபம் மற்றும் கூட்ட அரங்க உரிமையாளர்கள், நகை அடகு தொழில் செய்வோருக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், இணை ஆணையாளர் கற்பகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்ற நிலையில், பொதுக்கூட்டம், விழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது வாக்காளர்களுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை கையாண்டு வருவதை எந்த ஒரு உரிமையாளரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
அடகு வைக்கபட்டுள்ள நகைகள் வேட்பாளர்கள், முகவர்களால் மொத்தமாக மீளத் திருப்பப்பட்டு வாக்காளர்களுக்கு திருப்பி வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும். மொத்தமாக நகை அடகு நகைகளை திருப்ப எவரேனும் முற்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும். அடகு வைக்கப்படும் நகைகள் சந்தேகத்திற்கிடமான வகையில் மீளத் திருப்பப்படும்போது, அவை குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும். திருமண மண்டபம் மற்றும் கூட்ட அரங்க உரிமையாளரும் வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. திருமணக்கூடம் மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுபநிகழ்வுகள் தவிர வேறு எவ்வித அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டாலும், அதன் விவரத்தினை முன்கூட்டியே தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
சுபநிகழ்வுகள் என்ற பெயரில் மக்களைக் கூட்டி பரிசுப் பொருட்கள் வழங்குவது, புடவை, வேட்டிகள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறியப்பட்டால், அதனை உடனடியாக தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேர்தல் நடைபெறும் காலங்களில் உரிய அடையாள அட்டைகளை சரிபார்க்க வேண்டும். தேர்தல் தொடர்பாக வெளிமாநிலத்திலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வந்து தங்கியிருப்பவர்கள் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நாளன்று உடன் வெளியேறச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பூஷ்ணாதேவி, நகை அடகு தொழில் செய்வோர், திருமண மண்டபம் மற்றும் கூட்ட அரங்க உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
