×

வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது

சென்னை, மார்ச் 20: புறநகரில் உள்ள தொழிற்பேட்டைகளை சென்னை எண்ணூர் துறைமுகத்துடன் நேரடியாக இணைக்கும் வகையில், வெளிவட்ட சாலையையொட்டி புதிய ரயில் வழித்தடம் அமைய உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையின் சரக்கு போக்குவரத்து மற்றும் தொழில் துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், சுமார் 133 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய பிரத்யேக ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, மாநிலத்தின் மிக முக்கியமான உற்பத்தி மற்றும் தொழில் மையங்கள் அனைத்தும் நேரடியாக எண்ணூர் காமராஜர் துறைமுகத்துடன் இணைக்கப்படும். இதுகுறித்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சரக்குகளை எவ்வித தடையுமின்றி விரைவாக துறைமுகங்களுக்கு கொண்டு சேர்ப்பதாகும். இதற்காக சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி ஏற்கனவே 100 மீட்டர் அகலத்திற்கு பிரத்யேகமான நிலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் புதிய வழித்தடத்தில் நவீன ரயில் நிலையங்களை அமைப்பதற்கும், ரயில்கள் தடையின்றிச் செல்வதற்கு தேவையான வளைவுகளை சீரமைப்பதற்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கூடுதல் நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பசுமை வழித் திட்டமாக அமைவதால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் நவீனத் தொழில்நுட்பங்களுடன் இது செயல்படுத்தப்படும்.

இந்த 133 கிலோமீட்டர் நீள வழித்தடத்தில் எண்ணூர் அல்லது காட்டுப்பள்ளி, தச்சூர், புதுவயல் மற்றும் பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர் பைபாஸ், பெரும்புதூர், ஒரகடம், சிங்கபெருமாள்கோவில் மற்றும் மாமல்லபுரம் அல்லது பூஞ்சேரி ஆகிய பகுதிகளில் முக்கிய ரயில் நிலையங்கள் அமைய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் வாகன உற்பத்தி முனையங்களாகத் திகழும் பெரும்புதூர் மற்றும் ஒரகடம் போன்ற மிகப்பெரிய தொழில் மையங்கள் இந்த ரயில் பாதை மூலம் நேரடியாக துறைமுகங்களுடன் பிணைக்கப்படும். மேலும், திருவள்ளூர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் ஆகிய இடங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரயில்வே நெட்வொர்க்குடன் இந்தப் புதிய பாதை இணைக்கப்படும்போது, இது சென்னை மாநகருக்கு ஒரு முழுமையான வட்ட ரயில் போன்ற அமைப்பை உருவாக்கித் தரும்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது சென்னையின் ஒட்டுமொத்த போக்குவரத்து முகமே மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலை வழியாகத் துறைமுகங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவதால், சென்னை மாநகர சாலைகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நீங்கும். அதுமட்டுமின்றி, தொழிற்சாலைகள் நேரடியாக இரயில் பாதையுடன் இணைக்கப்படுவதால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான போக்குவரத்துச் செலவுகள் கணிசமாகக் குறையும். இது தமிழகத்தின் சர்வதேச வணிக போட்டியை வலுப்படுத்தும். புதிய ரயில் நிலையங்கள் அமையும் பகுதிகளில் புதிய வணிக வளாகங்கள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் குடியிருப்புகள் உருவாகி, அப்பகுதியின் பொருளாதார நிலையை உயர்த்தும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இந்த ரயில் வழித்தடம் தென்னிந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார காரிடாராக உருவெடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : CHENNAI ,CHENNAI TOLUR ,Tamil Nadu government ,Southern Railway Administration ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்