திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் மார்ச் மாத உண்டியல் வருவாய் ரூ. 4.36 கோடி மற்றும் 1 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாத உண்டியல் எண்ணிக்கை கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் நடந்தது. திருக்கோயில் தக்கார் அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டார்.
இணை ஆணையர் ராமு முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், மெய்வேல், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதன்படி உண்டியல் எண்ணிக்கையில் 4 கோடியே 36 லட்சத்து 87 ஆயிரத்து 797 ரூபாயும், தங்கம் 1,143 கிராம், வெள்ளி 20,474 கிராம், பித்தளை 91,180 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 2,071 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.
