×

காரில் எரிந்த நிலையில் 4 உடல்கள் மீட்பு: நெல்லை அருகே இன்று பயங்கரம்

நெல்லை: திசையன்விளை அருகே ரோட்டிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் ஒரு காரில் எரிந்த நிலையில் 4 உடல்களை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்தும், கடன் பிரச்னையில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே பெட்டைகுளத்திலிருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் ரோட்டில் இருந்து 300 மீட்டர் பக்கவாட்டில் தரிசு நிலத்தில் இன்று அதிகாலை ஒரு காரில் எரிந்த நிலையில் 4 உடல்கள் இருந்தன.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள், திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர்களில் எத்தனை பேர் ஆண், பெண்? என்பது தெரியாத அளவுக்கு உடல்கள் கருகியுள்ளன. கார் எப்படி தீப்பிடித்தது? என்பதும் தெரியவில்லை.

திசையன்விளை பகுதியில் நகை தொழில் செய்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் இங்கிருந்து கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு நகைகளை செய்து அனுப்பி வருகின்றனர். தற்போது நகை விலை பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் பலருக்கு நகை வேலைக்கு ஆர்டர் கிடைக்கவில்லை. இதனால் தொழில் நலிவடைந்துள்ளது. இதை நம்பி லட்சக்கணக்கில் கடன் வாங்கியவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இவ்வாறு நகை தொழிலில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்த குடும்பம், கடன் பிர்சனையிலிருந்து மீள முடியாமல் காரில் வந்து ‘கேஸை’ திறந்துவிட்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. திசையன்விளை அருகே காரில் எரிந்த நிலையில் 4 உடல்கள் கிடந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Nellai ,Vetiyaanvilai ,
× RELATED த.வெ.க. தலைவர் விஜய்யிடம் ரூ.404.58 கோடிக்கு...