பிரைட்டன்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த ஆர்சனல் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அணியை வெற்றி கண்டது. பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் இங்கிலாந்தின் பிரைட்டன் நகரில் நேற்று நடந்தன. அதில் பலம் வாய்ந்த ஆர்சனல்-பிரைட்டன் அணிகள் மோதின. துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சனல் அணியின் புகாயோ சகா, 9வது நிமிடத்தில் அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று பீல்ட் கோல் போட்டார். அதன் பின் இரு அணி வீரர்களும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின.
கடைசியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றி வாகை சூடியது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் நியூகேசல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மேன் யுனைடெட் அணியை வீழ்த்தியது. செல்ஸீ – ஆஸ்டன் வில்லா அணிகள் இடையே நடந்த இன்னொரு போட்டியில் செல்ஸீ அணி வீரர்கள் 4 கோல் போட்டு அசத்தினார். மாறாக, ஆஸ்டன் வில்லா அணியால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. அதனால், 4-1 என்ற கோல் கணக்கில் செல்ஸீ வெற்றி கண்டது.
