×

கூர்கா உறையிலிருந்து கத்தியை எடுத்தால் ரத்தம் பார்க்காமல் விடாது என்பதைப் போல: விஜய் பிரசார வாகனத்தை எடுத்தாலே விபத்து

சென்னை: நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திரம், அரசியல் களத்தில் கால்பதிக்க முடிவெடுத்து, 2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அறிவித்தார். கட்சி அறிவிப்பு பிப்ரவரியிலேயே நடைபெற்றது, ஆனால் அதன் முதல் மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அது வரை பனையூரில் உள்ள இல்லத்தில் இருந்து மட்டுமே கட்சி நடத்தி வந்தார். இந்த மாநாட்டில் பங்கேற்ற சென்றவர்கள் கிட்டத்தட்ட 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

இது நேரடி பிரசார வாகன சம்பவம் அல்ல என்றாலும், கூட்டத்தின் அளவு மற்றும் உற்சாகம் காரணமாக ஏற்பட்ட விபத்துகளாகக் கருதப்பட்டது. அதன்பிறகு, விஜய் பல மாதங்களாக தனது பனையூர் இல்லத்தில் இருந்து வெளியே வராமல், அறிக்கைகள் மூலம் கட்சியை நடத்தி வந்தார். அதனை தொடர்ந்து, 2025ம் ஆண்டில் அவரது பிரசாரங்கள் தீவிரமடைந்தன. குறிப்பாக, 2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 14 ஆண்கள், 4 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகள் அடங்குவர்.

மேலும், சுமார் 100 முதல் 120 பேர் வரை காயமடைந்தனர், அவர்களில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சம்பவம் நிகழ்ந்தபோது, விஜய் தனது பிரசார வேனில் இருந்து உரையாற்றிக் கொண்டிருந்தார். கூட்டத்தின் அளவு கட்டுப்பாட்டை மீறியதால், நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, தவெக அமைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, மேலும் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாக அரசு குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் கூடினர், ஆனால் அங்கும் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்தன.

மேலும் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், 37 வயதான சூரஜ் என்ற மஹாராஷ்டிராவை சேர்ந்தவர், வெயில் மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். இப்படி, தவெக தலைவர் விஜய் நடத்தும் பொதுக்கூட்டங்கள் அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் எதாவது அசம்பாவிதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.விஜயின் பிரசாரங்கள் பெரும்பாலும் திறந்தவெளி கூட்டங்கள், ரோட் ஷோக்கள் மற்றும் வேன் பிரசாரங்களாக அமைகின்றன. இவை அவரது ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், கூட்டத்தின் அளவு கட்டுப்பாட்டை மீறும்போது, கூட்ட நெரிசல் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. இத்தகைய சம்பவங்களுக்கு கூட்ட அமைப்பாளர்களின் அலட்சியத்தையும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளின் பற்றாக்குறையையும் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். உதாரணமாக, கரூர் சம்பவத்தில் விஜய் உரையாற்றும் போது ஆம்புலன்ஸ் வந்தபோதும் அவர் தொடர்ந்து பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது ஒருபுறம் இருக்க, விஜயின் பிரசார வாகனம் பின்னால் செல்லும்போது விபத்துகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. தொண்டர்கள் எனப்படும் ரசிகர்கள் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வேகமாக பின்தொடர்ந்து செல்கின்றனர்.

குறிப்பாக, விஜயின் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து வரும் இருசக்கர வாகனங்கள் (பைக்குகள்) மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், ரசிகர்கள் வாகனத்துக்கு மிக அருகில் சென்று வீடியோ எடுக்க முயல்வதாகும். உதாரணமாக, ஈரோடு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு விஜயின் காரை பின்தொடர்ந்து வந்த பைக்குகள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கின, பலர் காயமடைந்தனர். நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பைக் ஒன்று முன்னால் சென்ற காரை மோதியது.

இதில் 2 இளைஞர்கள் (விக்னேஷ் மற்றும் ஹிலால்) தலை மற்றும் கால் முறிவுகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் மொத்தம் 6 பேர் காயமடைந்தனர், இதில் ஒரு மாணவி மற்றும் இரு பெண்கள் அடங்குவர். இப்படி, விஜய்யின் பிரசார வாகனம் எடுத்தாலே விபத்துகள் அல்லது இறப்புகள் ஏற்படுவதாகத் தோன்றுகிறது. கூர்காக்கள் பயன்படுத்தும் குக்ரி கத்தியைப் பற்றி பழங்காலத்திலிருந்தே ஒரு நம்பிக்கை உள்ளது. இந்த கத்தியை உறையிலிருந்த எடுத்தால், அது ரத்தம் பார்க்காமல் இருக்காது என்பார்கள். அதைப்போல விஜய்யின் பிரசாரம் என்றாலே விபத்து, இறப்பு என்றாகிவிட்டது என்கின்றனர் நெட்டிசன்கள்.

Tags : Vijay ,Chennai ,Tamil Nadu Victory Party ,
× RELATED உலக நாடுகளில் உள்ள 7 எரிமலைச்...