உடன்குடி, மார்ச் 3: ஆறுமுகநேரி சீனந்தோப்பைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(54), ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று காலை இதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக நாசரேத்திற்கு ஆட்டோவில் சவாரி அழைத்து சென்றார். ஆட்டோ புதுக்குடி வடக்கூர் பகுதியில் வரும்போது பூனை குறுக்கே பாய்ந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவர், பிரேக் அடித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த செந்தில்குமார் ஆட்டோவினுள் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் வந்த கலைச்செல்வி என்ற பெண் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் குரும்பூர் போலீசார் விரைந்து வந்து ஆட்டோ டிரைவரின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
