திருமலை: திருமணத்திற்கு வாலிபர் மறுத்ததால் ஒருதலை காதலியான யூ டியூபர் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கோமலி (21). இவர் அதே பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பியூட்டி பார்லரின் உரிமையாளரின் மகனான நிகில்ரெட்டியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். பின்னர் கோமலி, நிகில்ரெட்டியை ஒருதலையாக காதலித்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு நிகில்ரெட்டிக்கு ஐதராபாத், சித்ரபுரி காலனியில் உள்ள சாப்ட்வேர் கம்ெபனியில் வேலை கிடைத்தது.
இதனால் அவர் சித்ரபுரி பகுதியில் உள்ள தன்னுடன் பணிபுரியும் நண்பர்களுடன் தங்கினார். இதேபோல் கோமலிக்கு ஐதராபாத்தில் உள்ள மல்லரெட்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்ததால் ஐதராபாத் பாலநகரில் தங்கி படித்து வந்தார். கடந்தாண்டு கோமலி பாலநகரில் இருந்து, சித்ரபுரி காலனிக்கு குடி பெயர்ந்தார். அப்போது தனது செல்போனில் வீடியோ எடுத்து யூ டியூப்பில் பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன் கோமலி, நிகில்ரெட்டியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் நாம் நண்பர்களாகத்தானே பழகினோம் என்று கூறி மறுத்துள்ளார்.
இதனால் நிகில்ரெட்டி அம்மாவிடம் கோமலி தெரிவித்துள்ளார். அதற்கு அவர் நிகிலுக்கு விருப்பம் இல்லாதபோது, நான் என்ன முடியும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 21ம்தேதி கோமலி மீண்டும் நிகில்ரெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அப்போதும் நிகில்ரெட்டி மறுத்து விட்டாராம். இதனால் மன வேதனை அடைந்த கோமலி கடந்த 23ம் தேதி இரவு தனது அறையில் உள்ள மின்விசிறியில், துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோமலி தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை செய்ததில், அவர் தனது காதல் குறித்து ஒரு டைரியில் ஏழுதி வைத்திருந்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
