தர்மபுரி, பிப்.25: பென்னாகரத்தில் நடைபெற்ற ஏலத்தில் 4,481 கிலோ மஞ்சள் ரூ.6.08 லட்சத்துக்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 51 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்தனர். இ-நாம்(ஆன்லைன்) முறையில் ஏலம் நடந்தது. விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ.13,979க்கும், குறைந்தபட்சம் ரூ.13,000க்கும், சராசரியாக ரூ.13,971க்கும் ஏலம் போனது. உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ.12,899க்கும், குறைந்தபட்சம் ரூ.11,800க்கும், சராசரியாக ரூ.11,879க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 4481 கிலோ மஞ்சள், ரூ.6 லட்சத்து 8 ஆயிரத்து 503க்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
